எனக்கான என் உலகில்
வட்டமாய் என்னை சுற்றி
வரையப்பட்ட கோடும் நானும் மட்டும்
வெளியில் செல்லும் ஆசைகள்
பாதிக்கோட்டை அழிக்க ஆரம்பித்தன
என்னை யாரும் காண வந்தால்
கோடு சற்று பெரிதானது
என் உலகம் சொற்களால் ஆனது
வட்டத்துக்குள் அடங்காமல் சொற்கள் அங்கங்கே திமிறும்.. அலையும்
ஆசைகள் அழித்த கோட்டை தாண்டி
சொற்கள் நீராவியாய் மாறி மறைந்து சென்றது
இங்கு நான் புது உலகை காணவா
தொலைந்த சொற்களை தேடவா
அலைந்த சொற்களில் ஒன்றிரண்டு காயம்பட்டு திரும்பின
என்னை சுற்றி புதிய உலகம் வரையப்பட்டது
நான் அவசரமாய் என் வட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்
புதிதாய் கோட்டையும் அழுத்தமாய் வரையத்தொடங்கினேன்
என்னைத்தாண்டி சென்ற சொற்கள்
அலைகிறது வெளியெங்கும் என்னைத்தேடி