சதுரங்கக் குதிரை

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks


இயல்பாக நடக்கின்ற விஷயங்கள் முரண்பட்டு போகும்போது அதன் காரணங்களை தேடாமல் இயைந்து செல்பவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் எந்த காரணமும் என் மனதிற்கு பிடித்ததாய் இல்லாமல் போவதுதான். மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு வியாழன் இரவு, ஷார்ஜாவில் மாப்பி.கோபியை சந்தித்து திரும்பும்போது, தம்பி.கதிர் சிலாகித்து கூறியிருந்த நாஞ்சில் நாடனின் சதுரங்கக் குதிரையை தந்தான். கூடவே ஒரு எச்சரிக்கையையும் சேர்த்திருந்தான்.

"முடிஞ்சா இத முழுசா படிக்காம இருக்க டிரை பண்ணு!"

இல்லாமை, இயலாமை, வறுமை இந்த மூன்றுமே கொடுமைதான். அதனினும் சுமையாய் தலைமையில் நரைமையை தடவி, தன் முதுமை அருகில் வரும்போது ஆதரவாக முதுகு தொடும் பெண்மை நாடாதவனின் தனிமை பயணப்போக்குதான் இந்த கதை. (ரொம்ப ஓவராயிருக்கோ!). எளிமையாக கூறுவதென்றால் இது ஒரு பிரம்மச்சாரியின் கதை. :))


சமூகத்தில் திருமணமாகா பெண்கள் நிலையை அதிகம் அறியப்பட்ட மனதில், ஒரு ஆண் திருமணமாகாமல் இருக்கும்போது நிகழ்பவைகளை அருகில் சென்று பார்க்கும்படியாக படிப்பவர்களை வசப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இதில் முக்கியமான ஒன்று நாயகன் காதல் வசப்பட்டவனோ, அல்லது காதலில் தோற்றவனோ அல்ல..

நாராயணன் என்ற ஒற்றை மனிதனின் வாழ்வோட்டங்களே கதை. மும்பை என்று இப்பொழுது கூறப்படும் பம்பாயில் தனியனாக நெருங்கிய நட்புகளின்றி வாழ்க்கையை அதன் போக்கில் ஓடவிட்டு அதன்போக்கிலேயே வெளிவட்டத்தை வேடிக்கை பார்க்கும் நாயகன். தாயின் மரணத்திற்கு செல்ல இயலாமல், உறவினர்களின் பேச்சுக்களை தாங்கிக்கொண்டு தன் வறுமையை எண்ணி நொந்து போகிறான். திருமணம் வேண்டாமென எண்ணாமல் சில பெண்பார்க்கும் நிகழ்விலும் கலந்து அனுபவங்கள் பெறுகிறான். திருமணம் செய்யாததால் இவனை வேறெப்படியும் யோசிக்க விடாமல் தன் கற்பை சில நேரம் கெடுத்தும் வைக்கின்றான். இந்த கதையின் முடிவை படித்து முடித்தபின் எல்லோருக்குமே சொல்லாமல் வைத்திருக்கும் அன்பினையோ காதலையோ சொல்லிவிட தூண்டும். எனக்கும் தூண்டியது. ஆனால் இன்னும் சொல்லவில்லை!

கதையில் நாராயணன் பயணம் போகும் காட்சிகளும் வர்ணனைகளும் அற்புதம். ரயில் பயண அனுபவம் பெற்றவராயிருப்பின் (எனக்கு அதிகம்!) இந்த வர்ணனைகள் அதிக சுகம் தரும். ஏதோ பழகிய நண்பனுடன் பிரயாணிப்பது போன்ற உணர்வு வந்தது. நாராய‌ண‌னுட‌ன் வேலை செய்யும் குட்டினோ க‌தாபாத்திரத்தை தழுவி ச‌மீப‌த்தில் வெளியான‌ ஹிட்டான‌ ஒரு ஹிந்தி ப‌ட‌த்தில் காண‌ நேர்ந்த‌ ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.

கதையில் நாராயணன் சந்திக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் துணைக்கு ஏங்கும் வகையில் அமைகின்றனர். சிலருக்கு வாழ்க்கைத்துணை சரிவர அமைவதில்லை. சிலருக்கு பேச்சுத்துணை அமைவதில்லை. ஆயினும் இறுதிவரை நாராயணனுக்கு துணையாக அவனுக்கு பிடித்த சிகரெட்களும் ஒரு மதுபுட்டியும் கிடைக்கட்டுமென ஆண்டவனை வேண்டுவோம். ஏனெனில் நாம் அனைவ‌ருமே ஒரு வ‌கையில் நாராய‌ண‌னாயிருப்ப‌வ‌ர்க‌ள் தான்.

சதுரங்கத்தில் குதிரையின் ஆட்டமுறை சற்று வித்தியாசமானது. இரண்டு கட்டம் நேரே சென்று ஒரு கட்டத்தில் வளைந்து விடும். அந்த வளையும் கட்டமும் எந்த பக்கத்திலும் திரும்பும். குதிரைக்கு முன்னே பின்னே வேறு காய்கள் இருந்தாலும் அதற்கு எந்த இடையூறுகளும் கிடையாது. நாராயணனின் மனப்போக்கிற்கு ஏற்ற மிகச்சிறந்த தலைப்பு.

திருமணமானவர்கள் இந்த கதையை படிக்கலாம்.. நல்ல கதை..
திருமணமாகாதவர்கள் கண்டிப்பாக படியுங்கள்.. ரொம்ப நல்ல கதை..

புத்தகம் : சதுரங்கக் குதிரை
ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி, கோயம்புத்தூர் 641 001