அந்த வனத்தில் சூரியனின் ஒளியை உள்ளே விழ விடாது குடையாய் மாறியிருந்த மரங்களுக்கிடையே கிடைத்த இடைவெளிகளை பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியசாலியாய் வெளிச்சம் பூமியை முத்தமிட்டு ரசித்து விழுந்து மகிழ்ந்தது.
மெல்லிய காற்றின் அலைச்சல்கள் இலைகளின் நுனிகளில் அமர்ந்து ஊஞ்சலாடியது. சில்வண்டுகளின் ரீங்காரங்கள் ஒரே சமயத்தில் எழுந்து அடங்கி அடங்கி எழுந்து தொடர்ந்து பறந்து சென்றது. எங்கோ தொலைதூரத்தில் பெய்கின்ற மலையருவி ஓசையின் சப்தத்துடன் நிசப்தம் சற்று அடிபட்டு செத்துப்போகும் நேரத்திலும் அமைதி கட்டுக்குலையாமல் இருந்தது. கிளிகள் தங்கள் இணைகளோடு சிறகுகளை சப்தப்படுத்தி பறந்து சென்றது.
ஒவ்வொரு மரத்தின் அடியிலும் செத்துப்போயிருந்த சருகுகள் காற்றின் உயிர்த்துடிப்புகளை தன்மேல் ஏற்றி உயிர்த்து மரித்தது. அடர்ந்த மண்துகள்கள் சருகுகளின் சாவை பொறுக்காமல் தானே தன்னையள்ளி தாவி படர்ந்தது. சில மரங்களின் அடியிலிருந்து தனியாய் வெடித்திருந்த சிறு செடிகளின் மஞ்சளும் நீலமும் சேர்த்து இதழ்களை கொண்ட பூக்கள் பற்றுதலாய் மரத்தின் மடியில் காற்றோடு தலைசாய்த்து முத்தம் தந்தது. மரத்தை சுற்றி பிணைந்திருந்த கொடிக்கு சொரசொரக்கும் மரத்தின் பட்டைகளைப் பற்றிய சந்தோஷத்தில் கொஞ்சம் கவலையும் சேர்ந்திருந்தது.
எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று மரங்களின் இடையே கிளைகளின் நடுவே புகுந்து வேகமாய் தரையிறங்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து அடுத்த காகமும் மண்ணில் இறங்கியது. அதனை தொடர்ந்து அடுத்த காகமும் அதற்கடுத்த காகமும் அதற்கடுத்தடுத்த காகங்களும் மண்ணில் இறங்கிய சில நிமிடத்துளிகள் முடிவதற்குள்ளாக அந்த இடம் காகங்களால் சூழப்பட்டு இருந்தது.
காகங்கள் கூட்டம் கலைந்த பின்னர் சிறிது நேரத்திற்கு முன்பு செத்துப்போயிருந்த எலியின் உடலின் எலும்பின் மேல் ஒட்டியிருந்த சதையின் மிச்சங்களும் 5 அங்குல அளவு கொண்ட தோலும் மட்டுமே மிஞ்சியிருந்தது.
டிஸ்கி குதிப்பு 1: காமக்கதைகள் மனிதனுக்கு மட்டும்தான் என்ற அதிகார கட்டுக்களை உதிர வைக்க எழுதப்படிக்க தெரியாவிட்டாலும் காமம் & பசி என்பது காக்காய், குருவி மற்றும் இன்னபிற எல்லா விலங்குகளுக்கும் உண்டு என்பதை மறவாமல் காகங்கள் கூடுதலாய் கூடிய இந்த முதல் கதையை செத்துப்போன எலிக்கு சமர்ப்பிக்கிறேன்.